

உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அணை நீர்ப்பிடிப்புகளில் பெய்த கன மழையால் கடந்த நவம்பர் மாதம் 3-ந்தேதி அணை நிரம்பியது.
இதையடுத்து கடந்த ஒரு மாதமாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,405 கன அடியாகவும், உபரிநீர் வெளியேற்றம் 1,042 கன அடியாகவும் இருந்தது.
கடந்த 2 நாட்களாக அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மறையூர், காந்தலூர், கொடைக்கானல் மேற்கு பகுதி மற்றும் வால்பாறை கிழக்கு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பாம்பாறு, தேனாறு மற்றும் சின்னாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது.
இதையடுத்து அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில், 87.60 அடியாகவும், நீர் இருப்பு 3,830 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,100 கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் உபரி நீர் ஆற்று மதகு வழியாக 3 ஆயிரம் கன அடியும், பிரதான கால்வாயில் 100 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.
உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் அமராவதி ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் அமராவதி கரையோர பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.