

நெல்லை:
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் வி.கே. சாலையில் அதே பகுதியில் வசிக்கும் வீரபாகு (வயது 40) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். தினமும் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்றும் இரவு வழக்கம்போல் அவர் வீட்டுக்கு சென்றார்.
இன்று அதிகாலை வியாபாரத்திற்கு பால் பாக்கெட்டுகள் எடுப்பதற்காக வீரபாகு கடைக்கு சென்று ள்ளார். அப்போது அங்கு கடையின் முன்பக்க கதவின் பூட்டு இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த வீரபாகு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 85 ஆயிரம் பணம் கொள்ளை யடிக்கப்பட்டு இருந்தது.
உடனே அவர் சந்திப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் ஆகியோர் கடையில் ஆய்வு செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.