search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்தால் நடவடிக்கை:   மீன்வளத்துறை அதிகாரி எச்சரிக்கை
    X

    மணிமுக்தா ஏரியில் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் சுதாகர் ஆய்வு மேற்கொண்டார்.

    தியாகதுருகம் அருகே ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்தால் நடவடிக்கை: மீன்வளத்துறை அதிகாரி எச்சரிக்கை

    • தியாகதுருகம் அருகே ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • சல்லடை பகுதியில் படும் மீன்கள் மீது மின்சாரம் பாய்வதால் மீன்கள் செத்து மிதக்கிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் இருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் மணிமுக்தா ஏரி உள்ளது. இந்த ஏரியில் சித்தலூர், பானையங்கால் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பலரும் வலைகளை வீசியும், தூண்டில் போட்டும் மீன் பிடித்து வருகின்றனர். ஒரு சில கும்பல்கள் மட்டும் அந்த ஏரி வழியாக வயல்வெளி பகுதிகளுக்கு செல்லும் மின் கம்பிகளில் திருட்டுத்தனமாக கொக்கியின் மூலம் மின்சாரம் எடுத்து அதன் மற்றொரு முனையை சுமார் 20 அடி நீளம் உள்ள குச்சியின் நுனி பகுதியில் சல்லடை போன்ற இரும்பு தகடுகளில் பொருத்துகின்றனர். தொடர்ந்து மின் கம்பிகளில் இருந்து கேபிள் வழியாக செல்லும் மின்சாரம் அந்த குச்சியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தகடுக்கு வருகிறது. அப்போது நீண்ட குச்சியின் மறுமுனையை அந்த நபர்கள் பிடித்துக் கொண்டு ஏரியில் உள்ள நீரில் அலசுகின்றனர். அப்போது சல்லடை பகுதியில் படும் மீன்கள் மீது மின்சாரம் பாய்வதால் மீன்கள் செத்து மிதக்கிறது. இவ்வாறு ஆபத்தான முறையில் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்களை பிடித்து வருவதாக கடந்த 10- ந்தேதி மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியானது.

    இதனையொட்டி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவின் படி மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி, மீன் வள ஆய்வாளர் சந்திரமணி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மீன்வள மேற்பார்வையாளர் சுதாகர் நேற்று மணிமுக்தா ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்தால் உயிர் சேதம் ஏற்படும். எனவே அவ்வாறு மீன் பிடிக்கக் கூடாது .மீறி மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்கும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மின்சாரத் துறைக்கு சொந்தமான மின் ஒயர்களில் திருட்டுத்தனமாக மின் இணைப்பு ஏற்படுத்தி மீன் பிடிக்கும் நபர்கள் மீது மின்சாரத் துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரித்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் ராஜதுரை, பானையங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×