பாலிடெக்னிக் கல்லூரியை நிரப்புவதற்காகவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது- அமைச்சர் பொன்முடி தகவல்

தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்கவும், சுயதொழில் பயிற்சி எடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என சட்டசபையில் அமைச்சர் பொன்முடி கூறினார்.
அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
Published on

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பொள்ளாச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க வேண்டும் என்றும், பாலிடெக்னிக் கல்லூரி அமைத்து தந்தால், பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாட்சி ஜெயராமன் கோரிக்கை வைத்தார்.

இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பதில் அளித்து பேசியதாவது:-

பொள்ளாட்சியில் 1 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி, 2 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. 1,640 மொத்த இடங்களில், 674 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

மேலும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆளில்லை. அதை நிரப்புவதற்காகவே நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தேவை ஏற்பட்டால், பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவது குறித்து முதல்-அமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்கவும், சுயதொழில் பயிற்சி எடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் அமைத்து பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் தொடக்கி வைக்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com