

பழனி:
பழனி வனச்சரகம் 18 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவை கொண்டது. இங்கு வரிப்புலி, சிறுத்தை, யானை, மான், கேளையாடு, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
வன விலங்குகளை சிலர் வேட்டையாடி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவலபட்டியில் உள்ள கீழ் தன்னாசியப்பன் கோவில் பகுதியில் ஒரு கும்பல் சென்று கொண்டிருந்தனர். வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையில் வனத்துறையினர் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் அவர்கள் தமிழ்ச்செல்வன் (வயது 23), அருண் (25), கணேசன் (23), தங்கவேலு (48), முருகன் (65), பழனிச்சாமி (55), பாலன் (57), கிருஷ்ணன் (48) என்பதும் வனவிலங்குகளை வேட்டையாட சென்றதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 8 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 6 வேட்டை நாய்களையும் பறிமுதல் செய்தனர். அவை விலங்குகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்ட ஈட்டி, கத்தி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 8 பேருக்கு தலா ரூ.12,500 என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.