search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் நடுரோட்டில் வாகனங்களை வழிமறிக்கும் குதிரைகள்
    X

    கோவையில் நடுரோட்டில் வாகனங்களை வழிமறிக்கும் குதிரைகள்

    • சாய்பாபா காலனியில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் முகாமிட்டு உள்ளன.
    • ஒரு சில நேரங்களில் தெரு நாய்களும் குதிரைகளும் மோதிக்கொள்ளும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.

    குனியமுத்தூர்,

    கோவை சாய்பாபாகாலனி, பாரதி பார்க் சாலையில் அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இதனால் அங்கு உள்ள ரோட்டில் மாணவிகளை அதிகம் பார்க்க முடியும்.

    சாய்பாபா காலனியில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் முகாமிட்டு உள்ளன. அவை பாரதி பார்க் பகுதியில் சுற்றி திரிகின்றன. ஒருசில நேரங்களில் குதிரைகள் நடுரோட்டில் வந்து நின்று மிரள வைக்கின்றன. இதனால் மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் குதிரைகளுக்கு பயந்து தடுமாறி கீழே விழுகின்றனர். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஏர்ஹாரன் அடிக்கும்போது குதிரைகள் மிரண்டு ஓடுகிறது. இதனால் எதிரே நடந்து வருபவர்கள் பதறி அடித்து நிலைதடுமாறி கீழே விழும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

    பாரதி பார்க் சாலையின் அருகில் ராமலிங்கம் காலனி வீதிகள் உள்ளன. அங்கு குதிரைகள் எந்நேரமும் சுற்றி திரிகின்றன. ஒருசில நேரங்களில் சத்தமாக கனைத்து பொதுமக்களை பதற வைக்கின்றன. இதனால் அங்கு வசிக்கும் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் தெரு நாய்களும் குதிரைகளும் மோதிக்கொள்ளும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. இதனால் அங்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

    அதுவும்தவிர இப்பகுதியில் மகளிர் விடுதிகள் அதிகம் உள்ளன. அங்கு தங்கியிருக்கும் பெண்களும் குதிரை கூட்டத்தை கண்டு அச்சப்பட்டு வெளியே வர முடியாமல் தவித்து நிற்கும் அவல நிலை உள்ளது. பாரதி பார்க் வீதியின் அனைத்து தெருக்களிலும் குதிரைகள் பவனி சென்று திரும்புகின்றன.

    இந்த நிலையில் நேற்று மாலை ஒருவர் மதுபோதையில் அத்துமீறி குதிரை சவாரி செய்ய கிளம்பினார். அப்போது குதிரை கனைத்துக் கொண்டு சிலிர்த்தது. இதனால் அந்த குடிமகன் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். அதனை கண்டு சாலையோரம் நின்றிருந்த அனைவரும் வேடிக்கையாக சிரித்தனர்.

    சாய்பாபாகாலனி பாரதி பார்க் வீதிகளில் குதிரைகளின் நடமாட்டத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். அவைகளை பிடித்து சென்று பட்டியில் அடைக்க வேண்டும். அந்த குதிரைகளின் உரிமையாளருக்கு கடும் அபராதம் விதித்து எச்சரிக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×