மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அழிக்கப்படும் வரலாற்று சின்னங்கள், பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மலைவாழ் குடியிருப்பு பகுதிகளின் அருகே, 25க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன.கல்திட்டைகள் குறித்த தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
 கோப்புபடம்
 கோப்புபடம்
Published on

உடுமலை,

தமிழகத்தின் வரலாற்று ஆதாரங்களில் முக்கியமாக கருதப்படுவது கல்திட்டைகள் ஆகும். கற்களை கருவியாக மாற்றி பயன்படுத்திய பின்னர் மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு உதாரணமாக இருப்பது கல்திட்டைகள் ஆகும்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கல்திட்டைகள் மற்றும் கல்பதுக்கைகள் வரலாற்று சின்னமாக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

சமவெளிப்பகுதிகளில் மட்டும் காணப்படும் கல்திட்டைகள், மலைத்தொடரில் அரிதாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவ்வகையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு இடங்களில் கல்திட்டைகள் கண்டறியப்பட்டு அம்மலைத்தொடருக்கும், மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தி வருகின்றன.

உடுமலை அருகே கோடந்தூர், ஈசல்திட்டு, தளிஞ்சி உட்பட மலைவாழ் குடியிருப்பு பகுதிகளின் அருகே, 25க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன. ஆனால், இவற்றின் வரலாறு தெரியாமல் படிப்படியாக அவை அழிந்து வருகின்றன.கல்திட்டைகள் குள்ளமனிதர்கள் வாழ்ந்த வீடு உட்பட பல்வேறு வதந்திகள் காரணமாக, அங்குள்ள பெரிய கற்களை அழிப்பது வழக்கமாகி விட்டது.வனப்பகுதியில் மலைத்தொடரில் அரிதாக காணப்பட்ட, பல்வேறு கல்திட்டைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. மேலும் சுற்றுலா பயணிகள் கல்திட்டைகளின் உள்பகுதியிலுள்ள உருவங்களை அழிக்கும் வகையில், தங்களின் பெயர்களை எழுதுவது போன்ற அவலங்களும் தொடர்கதையாக உள்ளது.உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியிலுள்ள கல்திட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கைக்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில்கேரள மாநில அரசு மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மேற்குத்தொடர்ச்சி மலையில் மறையூர் உட்பட பகுதிகளிலுள்ள கல்திட்டைகளை பாதுகாக்க, கம்பி வேலி அம்மாநில அரசினால் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாறை ஓவியங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடவும் அவற்றிற்கு பாதுகாப்பாகவும், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்திட்டைகள் குறித்த தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.இதனால், அங்குள்ள வரலாற்றுச்சின்னங்கள் பாதுகாப்பாக இருப்பதுடன், சுற்றுலா பயணிகளுக்கு வரலாறு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.இம்முறையை தமிழக அரசும் பின்பற்றினால் முன்னோர்கள் வரலாறு பாதுகாக்கப்பட்டு இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com