search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் விடிய விடிய கனமழை; குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரால் மக்கள் அவதி
    X

    ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதையும், வீட்டுக்குள் மழைநீர் சூழ்ந்திருப்பதை காணலாம்.

    தஞ்சையில் விடிய விடிய கனமழை; குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரால் மக்கள் அவதி

    • கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
    • தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக கடந்த 2 மாதங்களாக மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக மாறி மாறி பருவநிலை நிலவி வருகிறது. கடந்த மாதத்தில் பல நாட்கள் மழை பெய்தது.

    ஆனால் கடந்த மாத இறுதியில் இருந்து அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரித்து வந்தது.

    கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி அடைந்தனர்.

    கடந்த ஒரு வாரமாகவே 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தியது. பகலில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்து வந்தது.

    இரவு 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பொழிந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    நள்ளிரவு 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் இடி முழங்கியது.

    அவ்வப்போது மின்னல் அடித்துக் கொண்டிருந்தது.

    அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

    ஆரம்பத்தில் மிதமான அளவில் பெய்து வந்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரிக்க தொடங்கியது.

    கனமழையாக மாறி வெளுத்து வாங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து 2 மணி நேரம் மழை நீடித்தது.

    அதன் பின்னர் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    தொடர்ந்து இரண்டு மணி நேரம் அதாவது காலை 6 மணி வரை மிதமான அளவில் மழை பெய்தது.

    இதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    தொடர்ந்து பெய்த கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து கொண்டது.

    இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அவதி அடைந்தனர்.

    தஞ்சை சாந்த பிள்ளைக்கேட் ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கியது.

    இதனால் அந்த வழியை கடந்து பூக்கார தெரு, விளாருக்கு செல்லும் பொதுமக்கள் மாற்று பாதையில் சென்றனர்.

    சிலர் தண்ணீரை கடந்தும் சென்றனர்.

    தஞ்சை மாவட்டம் பூதலூரில் நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.

    சாலை, தெருக்களில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பூதலூரில் தான் 167.60 மி.மீ. மழை அளவு பதிவானது.

    இதேபோல் வல்லம், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    இதற்கிடையே தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ.) :-

    பூதலூர்-167.69, கல்லணை- 155, தஞ்சாவூர் -122, நெய்வாசல் தென்பாதி -118.20, வல்லம் -117, திருக்காட்டுப்பள்ளி- 89.40, பட்டுக்கோட்டை -88, ஒரத்தநாடு- 41.60, மதுக்கூர்-36, வெட்டிக்காடு- 36.

    Next Story
    ×