

தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டியை அடுத்த தோழனூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது48). விவசாயி. இவரது மனைவி சுகதிலி.
இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான பிரபு, அவரது மனைவி வெண்ணிலா, மற்றும் கண்மணி, சின்னமணி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விேராதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வெண்ணிலா, கண்மணி, சின்னமணி ஆகிய 3பேரும் சேர்ந்து கனகராஜை ஆபாசமாக திட்டி தாக்கினர்.
இதைத்தொடர்ந்து மாலையில் கனகராஜ் வீடுகளுக்கு பாலை ஊற்றி விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அங்கு வந்த பிரபு அவரை வழிமறித்து திட்டி அறைந்து விட்டார். இதனால் மனவருத்ததில் இருந்த கனகராஜ் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு கொண்டார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சுகதிலி ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.