

வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 47-வது பட்டமளிப்பு விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் திடலில் நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார், தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், நெல்லை தட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழக மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்கலைக்கழகத் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 28 மாணவர்கள் உள்பட 600-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், "இன்றைய மாணவர்களே எதிர்கால இந்தியாவின் தூண்கள். நீங்கள் நல்லொழுக்கத்துடனும், நேர்மை தவறாமலும் வாழ்வில் பயணித்து நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்" என்றார். விழாவில் கல்லூரிக்குழு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறையின் உதவிப் பேராசிரியர் வேல் பாண்டி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.