search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் நகைக்கடை அதிபரிடம் 1.30 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் மோசடி
    X

    கோவையில் நகைக்கடை அதிபரிடம் 1.30 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் மோசடி

    • கடனாக பெற்ற ரூ.15 லட்சம் மற்றும் 1900 கிராம் தங்கத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
    • பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்பாபுவை கைது செய்தனர்.

    கோவை, ஜூலை.31-

    கோவை செல்வபுரம் திருநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது50). நகைக்கடை அதிபர்.

    இவர் பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை செல்வ புரம் அசோக்நகரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வருகிறேன்.

    நானும் கோவை வைசியாள் வீதியில் தங்க நகை சீட்டு ஏல கம்பெனி நடத்தி வரும் மகேஷ்பாபு(55) என்பவரும் 30 ஆண்டுகளாக நண்பர்களாக பழகிவந்தோம்.

    இதனை தொடர்ந்து அவரது மகளுக்கு கடந்த 2018 ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது மகேஷ்பாபு என்னிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கினார். ரூ.100 க்கு 1 ரூபாய் வட்டி செலுத்தி வந்தார்.

    இதற்கிடையே மகேஷ்பாபு என்னிடம், நான் நடத்தி வரும் தங்க நகை ஏல சீட்டில் நல்ல லாபம் வருவதாகவும், நீயும் அதில் சேருமாறு கூறினார். இதனை உண்மை என நம்பி நான் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021-ம் ஆண்டு வரை அவரது ஏல சீட்டு கம்பெனியில் தங்கம் கொடுத்து வந்தேன்.

    மாத, மாதம் 80 கிராம், 85 கிராம் வீதம் 1756 கிராம் சொக்க தங்கத்தை கொடுத்தேன். அதன் பின்னர் மகேஷ்பாபு லாபத்துடன் சேர்த்து 1900 கிராம் தங்கம் தருவதாக உறுதியளித்தார்.

    ஆனால் அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும், கடனாக பெற்ற ரூ.15 லட்சம் மற்றும் 1900 கிராம் தங்கத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். பலமுறை கேட்டும் எந்த பயனும் இல்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணம் மற்றும் தங்கத்தை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில், பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மகேஷ்பாபு ரூ. 1.30 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணத்தை சிவக்குமாரிடம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேஷ்பாபுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×