பொறியியல் படிப்புக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்

கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.செப்டம்பர் 3-ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
பொறியியல் படிப்புக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்
Published on

சென்னை:

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவா் சோ்க்கையில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், சிறந்த விளையாட்டு வீரா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 22 முதல் 27-ந் தேதி வரை நடைபெற்றது. 22, 23 ஆகிய நாட்களில் சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதற்கு மொத்தம் 710 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த கலந்தாய்வு மூலம் 92 இடங்கள் நிரம்பின. கல்லூரியை தோ்வுசெய்து உறுதிப்படுத்திய மாணவா்களுக்கு 23-ந் தேதி இரவு இணைய வழியில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, சிறப்பு பிரிவினருக்கான பொது கலந்தாய்வு 25-ந் தேதி தொடங்கி சனிக்கிழமை முடிவடைந்தது. மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணை இன்று (ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இதைத்தொடா்ந்து வருகிற செப்டம்பர் 3-ந் தேதி வரை நடைபெறும் இக்கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

இதேபோன்று தொழிற் கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தொடா்ந்து வருகிற 10-ந் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வு ஒரே சுற்றாக நடத்தப்படுகிறது. கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை செயலா் டி.புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com