தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்- சாலையில் ஓடிய யானையால் பரபரப்பு

வனத்தை விட்டு 8 காட்டு யானைகள் வெளியேறி வெள்ளருக்கம்பாளையம் பால்காரர் தோட்ட பகுதிக்குள் புகுந்தது.செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் மற்றொரு 2 காட்டு யானைகள் புகுந்தது.
தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்- சாலையில் ஓடிய யானையால் பரபரப்பு
Published on

வடவள்ளி:

கோவை போளூவாம்பட்டி வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளன.

இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகின்றன.

அவ்வாறு வரும் யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு வனத்தை விட்டு 8 காட்டு யானைகள் வெளியேறி வெள்ளருக்கம்பாளையம் பால்காரர் தோட்ட பகுதிக்குள் புகுந்தது.

அந்த பகுதியில் சுற்றி திரிந்த யானை, அருகே உள்ள பகுதிகளுக்குள்ளும் புகுந்து சுற்றி திரிந்து வந்தன.

பின்னர் வண்டிகாரனூர் பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள், அங்குள்ள நந்தகுமார் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு தென்னை மரங்கள் மற்றும் போர்வெல் மோட்டார் பைப்புகளை சேதப்படுத்தி சென்றது.

இதேபோல் பூந்தோட்டம் அருகே செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் மற்றொரு 2 காட்டு யானைகள் புகுந்தது.

அங்கு சிறிது நேரம் சுற்றிய காட்டு யானைகள், கோடாங்கி பள்ளம் வழியாக வடக்கு நோக்கி சென்றது.

இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அந்த பகுதியில் சுற்றிய ஒற்றை காட்டு யானை, வனத்தை நோக்கி சென்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒருவர், சாலையில் யானை நடந்து வருவதை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். யானையும் அவரை துரத்தி சென்றது. அவர் பாதுகாப்பான இடத்திற்குள் சென்று தஞ்சம் அடைந்தார். அதன்பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது.

இந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com