

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கரன்கோவில் நகரில் உள்ள கோமதியாபுரம் தெருக்கள், லட்சுமியாபுரம் தெருக்கள், புதுமனை தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் அமைக்கப்பட்டிருந்த 25 விநாயகர் சிலைகளும், குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட 2 சிலைகளும், சங்கர நாராயணசாமி கோவில் முன்பு கொண்டு வரப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று மாலை கோவில் முன்பு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு அகில பாரத துறவியர் பேரவை இணை செயலாளர் சுவாமி ராகவானந்தா ஜீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்து முன்னணி தென்காசி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
பாரதீய மஸ்தூர் சங்க மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் சிறப்புரையாற்றினார். தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க மாநிலத் துணை தலைவர் மாரிமுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கோவில் முன்பு இருந்து தொடங்கிய விநாயகர் ஊர்வலம் மெயின் ரோடு, ராஜ பாளையம், திருவேங்கடம் சாலை, முக்கிய ரத வீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு சென்றடைந்தது.
இந்த ஊர்வலத்தில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் சுப்பிரமணியன், இந்து முன்னணி நெல்லை கோட்ட அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, இந்து முன்னணி நகர பொருளாளர் குருச்சந்திரன், பொதுச் செயலாளர் விஜய் பாலாஜி, நகர செயலாளர்கள் சங்கர், மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் பாலகுமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.