search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் தொடர் பனிப்பொழிவால் இருப்பு வைக்கப்பட்ட கருப்பட்டியில் பூஞ்சை-உற்பத்தியாளர்கள் கவலை
    X

    பூஞ்சை படிந்த கருப்பட்டி.

    உடன்குடியில் தொடர் பனிப்பொழிவால் இருப்பு வைக்கப்பட்ட கருப்பட்டியில் பூஞ்சை-உற்பத்தியாளர்கள் கவலை

    • கடந்த மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டியை சிலர் தங்களது வீடுகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.
    • இருப்பு கருப்பட்டிக்கு விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்தோம் என்று உற்பத்தியாளர் ஒருவர் கூறினார்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும் என விளம்பர போர்டு வைத்து விற்பனை செய்வார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது உடன்குடி கருப்பட்டி.

    தற்போது கருப்பட்டி உற்பத்தி சீசன் இல்லை. கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டியை சிலர் தங்களது வீடுகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள். தற்போது உட ன்குடி வட்டார பகுதியில் மழை குறைந்து, இரவு-பகலாக பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் இருப்பு வைத்த கருப்பட்டியில் பூஞ்சை என்ற வெள்ளை நிறத்தில் நூல் போன்றபாசி படிகிறது. இதை தடுக்க கருபட்டிக்கு புகைமூட்டம் போடுகிறார்கள், அப்படி இருந்தும் சில இடங்களில் கருப்பட்டி கசிந்து தண்ணீராக வெளி வருகிறது. இது பற்றி கருப்பட்டி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    கடந்த காலங்களில் உற்பத்தி செய்த கருப்பட்டியை வீடுகளில் பரன்களில் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளோம். இருப்பு கருப்பட்டிக்கு விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்தோம். ஆனால் தற்போது மழைக்காலத்தில் மழை பெய்யாமல் இரவு-பகலாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

    மழை பெய்தால் கூட கருப்பட்டிக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் பனிப்பொழிவு கருப்பட்டியை பதம் பார்த்துவிடும். இந்த பனிப்பொழிவால் எல்லா கருப்பட்டியிலும் பூஞ்சை பிடிக்கிறது. புகை போட்டாலும் அதை மீறி பூஞ்சை பிடிக்கிறது. கூடுதல் விலைக்கு ஆசைப்பட்டு இருப்பு வைத்தோம்.ஆனால் பனிப்பொழிவில் எல்லாம் கசிந்து விடும் போல தெரிகிறது என்று கவலையுடன் கூறினார்.

    Next Story
    ×