search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டுக்கூடு  கழிவுகளில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க மாணவர்கள் விழிப்புணர்வு
    X

    பட்டுக்கூடு கழிவுகளில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க மாணவர்கள் விழிப்புணர்வு

    • பட்டு வளர்ச்சித்துறை சார்பில் வழிகாட்டுதல் மற்றும் மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • பருவ மழை சீசன் மற்றும் இதர காரணங்களால் வெண்பட்டுக்கூடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    உடுமலை :

    தமிழகத்தில் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் உடுமலை பகுதி முன்னிலையில் உள்ளது. சுற்றுப்பகுதியில் 2,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் மல்பெரி சாகுபடி செய்து விவசாயிகள் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுக்கூடு உற்பத்தி மட்டுமல்லாது அது சார்ந்த, இளம்புழு வளர்ப்பு மனை (ஜாக்கி சென்டர்), ரீலிங் யூனிட் அமைக்கவும், விவசாயிகளுக்கு மத்திய அரசின் பட்டுவாரியம் மற்றும் மாநில அரசின் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் வழிகாட்டுதல் மற்றும் மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    பட்டுக்கூடு விலை வீழ்ச்சியின் போதும் பருவ மழை சீசன் மற்றும் இதர காரணங்களால் வெண்பட்டுக்கூடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அப்போது மாற்றுத்தொழிலுக்கும் செல்ல முடியாமல் அதிக பாதிப்பை அவர்கள் சந்திக்கின்றனர்.

    இந்நிலையில் பட்டுக்கூடு உற்பத்தி சார்ந்து பெறப்படும் கழிவுகளையும், மதிப்பு கூட்டி வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்தாலும் விவசாயிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

    தற்போது உடுமலை வட்டாரத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பட்டுப்புழுவியல் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.இம்மாணவர்கள் உடுமலை பகுதியில் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுடன் நேரடியாக கலந்தாய்வு நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர். மேலும் இத்தொழிலில் கூடுதல் வருவாய் கிடைப்பதற்கான வழிகாட்டுதல்களையும் பட்டு வளர்ச்சித்துறையினருடன் ஆலோசித்து, விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மாணவர்கள் நந்தகுமார், அபிஷேக், அருண், அஸ்வின், இலியாஸ், மவுலிதர்ஷன் கூறியதாவது:-

    பட்டுக்கூடு உற்பத்தி செய்வதிலேயே விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலிருந்து கிடைக்கும் மற்ற பொருட்களை கழிவுகளாகவே எண்ணுகின்றனர். இவ்வகையான பொருட்களை மதிப்பு கூட்டுவதால் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.பெரும்பாலான பட்டு விவசாயிகள், புழுவளர்ப்பு மனை கழிவுகளான மல்பெரி குச்சிகள், இலைகள் போன்றவற்றை வீணாக எரிக்கின்றனர்.

    ஆனால் இவற்றை ப்ரிக்வெட் யூனிட்டுகளாக மாற்றி விற்பனை செய்யலாம். சுருக்கப்பட்ட மரக்கழிவுகள் எரிப்பொருள்களாக பயன்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக டன்னுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மாத வருமானம் கிடைக்கும்.

    பட்டுக்கூடுகளை நூலாக மாற்றும், நூற்பாலைகளில் கூட்டுப்புழுக்களை பயன்படுத்துவதில்லை. இந்த புழுக்களை வீணடிப்பதை தவிர்த்து கூட்டுப்புழு எண்ணெய், கூட்டுப்புழு எண்ணெய் சோப்பு போன்றவற்றை தயாரிக்கலாம். மல்பெரி பழங்களில் இருந்து ஜாம், ஜெல்லி, ஜூஸ் மற்றும் மல்பெரி இலைகளில் இருந்து தேநீர் பொடி ஆகியவையும் தயார் செய்து பயன்படுத்தலாம்.வீணாகும் பட்டுக்கூடுகளிலிருந்து பட்டுக்கூடு மாலை, பட்டுப்பூக்கூடை போன்றவை தயாரிக்கலாம்.இத்தகைய தயாரிப்புகளுக்கு, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பட்டுப்புழுவியல் துறையில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றனர்.

    Next Story
    ×