

தருமபுரி,
முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட தலைமை செயலாளரால் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 24.06.2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், எலும்பியல் மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை, பல், மனநலம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், காசநோய், தொழுநோய், கொரோனா பரிசோதனைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது.
மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, RFT, Cholesterol பரிசோதனை, E.C.G, ECHO, U.S.G (Scan), மகப்பேறு மருத்துவம், பெண்களுக்கான மார்பாக புற்றுநோய், கர்ப்பபை வாய் புற்றுநோய், கண்டறியும் பரிசோதனை ஆகியவை பொதுமக்களுக்கு அளிக்கப்படவுள்ளது.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை முகாம் நடைபெறும் இடத்திலேயே வழங்கப்படவுள்ளது. இம்மருத்துவ முகாமில் மேற்கண்ட சிகிச்சை தொடர்பான சிறப்பியல் மருத்துவர்கள் (இருதய நோய் நிபுணர், சிறுநீரகவியல் நிபுணர், நரம்பியல் நிபுணர்) பங்கேற்கிறார்கள். மேலும், இம்மருத்துவ முகாமில் மருந்துகள், மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். இதில், தருமபுரி மாவட்ட பொது மக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.