கடன் வாங்கி தருவதாக மோசடி : பெரியகுளத்தில் வங்கியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

ரூ.50 லட்சம் கடன் வழங்க அனுமதி அளித்தும் அதனை வழங்காமல் மகளிர்திட்ட அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் இணைந்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள அரசு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த ஏராளமான பெண்கள் 10 மகளிர் சுயஉதவிக்குழுக்களை தொடங்கினர். இவர்கள் மாவட்ட மகளிர்திட்ட அலுவலகத்தில் உள்ள பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் கீழ் தங்கள் குழுக்களுக்கு கடன்கேட்டு விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் தங்கள் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் கடன் வழங்க அனுமதி அளித்தும் அதனை வழங்காமல் மகளிர்திட்ட அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் இணைந்து மோசடி செய்ததாக கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள அரசு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து பெண்கள் கூறுகையில், எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த 10 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் கடன் வழங்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மகளிர் திட்ட அதிகாரிகள் அந்த கடன் தொகையை எங்களுக்கு வழங்காமல் மோசடி செய்துள்ளனர்.

எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எங்கள் குழுக்களுக்கு முறையாக கடன் வழங்கவேண்டும் என்றனர். போராட்டம் குறித்து அறிந்ததும் பெரியகுளம் போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். ரூ.50 லட்சம் கடன்தொகையை பெற்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com