பிரம்மோற்சவ திருவிழாவுக்காக கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலுக்கு மேலும் 2 புதிய வாகனங்கள் வந்தன

அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவும், அதற்கு முன்பாக அடுத்தமாதம் (நவம்பர் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை, 4 நாட்கள் பவித்ர உற்சவ திருவிழாவும் நடத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து சீனிவாசத் திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட உள்ளது.
பிரம்மோற்சவ திருவிழாவுக்காக கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலுக்கு மேலும் 2 புதிய வாகனங்கள் வந்தன
Published on

கன்னியாகுமரி, அக்.20-

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் வெங்கடேச பெருமாள் எழுந்தருளியுள்ளார். இது தவிர பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளும் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த கோவிலில் திருப்பதியை போன்று பிரம்மோற்சவ திருவிழா நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பக்தர்களின்கோரிக்கையை ஏற்று இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் பிரம்மோற்சவ திருவிழாவின் போது 10 நாட்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலை சுற்றி வெங்கடாஜலபதி சுவாமி பவனி வருவதற்காக 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில் திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 7 தலைநாகம் கொண்ட பெரிய சேஷ வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் ஆகிய 3 புதிய வாகனங்கள் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜபதி கோவிலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தவிர 5 தலை நாகம் கொண்ட சின்னசேஷ வாகனம், சிம்மவாகனம் ஆகிய மேலும் 2 புதிய வாகனங்கள் திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதி உள்ள வாகனங்கள் பக்தர்கள்மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு விரைவில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவும், அதற்கு முன்பாக அடுத்தமாதம் (நவம்பர் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை, 4 நாட்கள் பவித்ர உற்சவ திருவிழாவும் நடத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து சீனிவாசத் திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com