search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு எதிரொலி: பருப்பு, கோதுமை இருப்பு விபரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் மொத்த வியாபாரிகளுக்கு வேண்டுகோள்
    X

    உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு எதிரொலி: பருப்பு, கோதுமை இருப்பு விபரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் மொத்த வியாபாரிகளுக்கு வேண்டுகோள்

    • தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
    • வாராவாரம் குடிமை பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும்.

    கடலூர்:

    அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக ஏறி வருகிறது. இதையடுத்து மளிகை, பருப்பு வகைகள், கோதுமை, காய்கறி போன்றவைகளை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, கோதுமை போன்றவைகளின் வணிகர்கள் தங்களிடம் உள்ள இருப்பு விவரங்களை அரசின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். வாராவாரம் வெள்ளிக்கிழமை இதனை பதிவிட வேண்டும்.

    குடிமை பொருள் வழங்கல் துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது, இதில் வித்தியாசம் வரக்கூடாது. இதனை மீறி யாரேனும் பதுக்கி அதிக விலைக்கு விற்க முயற்சித்தால் அவர்களின் மீது 1955-ம் ஆண்டு வெளியிடப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், கடலூர் மாவட்ட சேம்பர் ஆப் காமர்சின் இணை செயலாளருமான என். செல்லபாண்டியன் கூறியதாவது;-

    நாடு முழுவதும் பொதுமக்களின் உணவுத் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் விளைச்சல் குறைவதால், பொருட்களின் பற்றாக்குறை உருவாகிறது. இதனால் வியாபாரிகள் அனைவரும் தங்களிடம் உள்ள பருப்பு வகைகள் மற்றும் கோதுமையின் இருப்பு விபரத்தை வாராவாரம் குடிமை பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். கடந்த ஆண்டு எண்ணெய் தட்டுப்பாடு நிலவியபோது, தங்களிடம் உள்ள இருப்புகளை பதிவு செய்ததை போல இதனையும் பதிவு செய்ய வேண்டும். எனவே, மொத்த வியாபாரிகள், மில் உரிமையாளர்கள் மற்றும் பெரு மற்றும் சிறு வணிகர்கள் இதனை பின்பற்றி அரசின் விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த உத்தரவு வரும் மார்ச் மாதம் 2024-ம் ஆண்டு வரையில் நீடிக்கும்.

    மேலும், எதிர்வரும் மாதங்களில் பண்டிகைகள் அதிகளவில் வரும் என்பதால் அரசு இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறது. இதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மேலும், இது தொடர்பாக தங்களுக்கு ஏதேனும் தகவல் வேண்டுமெனில், கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×