search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாணார்பட்டி அருகே சிறு குளத்தில் மீன் பிடி திருவிழா
    X

    மீன்பிடி திருவிழாவில் உற்சாகமாக மீன்களை பிடித்த வாலிபர்கள்.

    சாணார்பட்டி அருகே சிறு குளத்தில் மீன் பிடி திருவிழா

    • ராஜக்காபட்டி ஊராட்சியில் சிறு குளம் உள்ளது.இந்த குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
    • சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை,கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மீன்களை பிடித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ராஜக்காபட்டி ஊராட்சியில் சிறு குளம் உள்ளது.இந்த குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் சிறுகுளம் நிரம்பியது.விவசாயத்திற்கு சிறுகுளம் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது.இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று ஊராட்சி மன்ற தலைவர் பராசக்தி முருகேசன்,ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறு குளத்தின் அருகே உள்ள கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.அதன் பின்னர் சிறுகுளத்திற்கு ஊர்வலமாக வந்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த மீன்பிடி திருவிழாவில் சாணார்பட்டி,மணியக்காரன்பட்டி, கம்பிளியம்பட்டி,வடமதுரை,காணப்பாடி,ஆலம்பட்டி,செங்குறிச்சி,நத்தம் உள்பட பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை,கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மீன்களை பிடித்தனர்.

    இதில் கட்லா, ஜிலேபி, விரால், தேளிவிரா, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த மீன்பிடி திருவிழாவில் பிடித்த மீன்களை கிராம மக்கள் தங்கள் இல்லங்களில் சமைத்து சாப்பிட்டனர்.இதனால் இந்த பகுதி முழுவதும் மீன் குழம்பு வாசம் கமகமவென்று வீசியது.

    Next Story
    ×