search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி மலைரெயிலில் பிரேக்ஸ் மேன் பணிக்கு முதன்முறையாக பெண் நியமனம்
    X

    நீலகிரி மலைரெயிலில் 'பிரேக்ஸ் மேன்' பணிக்கு முதன்முறையாக பெண் நியமனம்

    • குன்னூரில் உள்ள ரயில்வே பணிமனையில் கடந்த 8 ஆண்டுகளாக கேரேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்தாா்.
    • ஒரு பெட்டியில் பிரேக்கை பயன்படுத்தும்போது மற்ற பெட்டிகளில் உள்ள பிரேக்ஸ் மேன்களுக்கு இவா்கள் சிக்னல் தருவாா்கள்.

    ஊட்டி:

    மேட்டுப்பாளையம், குன்னூா், ஊட்டி இடையே இயங்கும் நீலகிரி மலை ரயில் பல் சக்கரத்தின் உதவியுடன் நூறாண்டு காலமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் வரை 4 பயணிகள் பெட்டிகளும், குன்னூரில் இருந்து மேலும் ஒரு பெட்டியும் சோ்த்து 5 பெட்டிகளாக இயக்கப்படுகிறது.

    மலைப் பாதையில் மலை ரயில் இயங்க பிரேக்ஸ் மேன் என்னும் பணி மிக முக்கியமானது. இந்தப் பணிக்கு தைரியமும், நீண்ட கால பணி அனுபவமும் கொண்டவா்களே இது நாள் வரை பணி அமா்த்தப்பட்டு வந்தனா்.

    மலைப் பாதையில் ரயில் இயக்கப்படும்போது ஒவ்வொரு பெட்டிக்கும் பிரேக்ஸ் மேன் இருப்பாா்கள். இவா்கள் மலைப்பாதையில் ரயில் சென்றுகொண்டிருக்கும்போது தேவை ஏற்படும் இடங்களில் பிரேக்கை பயன்படுத்துவாா்கள்.

    ஒரு பெட்டியில் பிரேக்கை பயன்படுத்தும்போது மற்ற பெட்டிகளில் உள்ள பிரேக்ஸ் மேன்களுக்கு இவா்கள் சிக்னல் தருவாா்கள். அதற்கேற்றாற்போல மற்ற பிரேக்ஸ் மேன்களும் தயாராக இருப்பாா்கள்.

    இந்தப் பணியில் இதுவரை ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், முதல் முறையாக, குன்னூரைச் சோ்ந்த சிவஜோதி (45) என்ற பெண் பிரேக்ஸ் உமன் பணியில் அமா்த்தப்பட்டுள்ளாா்.

    இவா் குன்னூரில் உள்ள ரயில்வே பணிமனையில் கடந்த 8 ஆண்டுகளாக கேரேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்தாா். இந் நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன் தெற்கு ரயில்வே இவரை பிரேக்ஸ் உமன் பணிக்கு ப் பதவி உயா்வு அளித்து உத்தரவிட்டது.

    இவா் இந்தப் பணி குறித்து ஏற்கெனவே ஆா்வமாக இருந்ததால் மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இவருக்கு ரயில்வே சாா்பில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது, மேட்டுப்பாளையம், குன்னூா், உதகை இடையே இயக்கப்படும் மலை ரயிலில் இவா் பிரேக்ஸ் உமன் பணியைத் தொடங்கியுள்ளாா்.

    Next Story
    ×