மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது

மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக நிரம்பியது. டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது
Published on

சேலம்:

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்தை விட அதிகளவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

இதற்கிடையே நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அப்போது அதிகபட்சமாக வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. பின்னர் மீண்டும் நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.75 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 467 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com