search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்கள் பற்றாக்குறையால் பொக்லைன் எந்திரம் மூலம் கிணறு வெட்டும் விவசாயிகள்
    X

    பொக்லைன் இயந்திரத்தை பழைய கிணற்றினுள் இறக்கவிட்டு, கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

    ஆட்கள் பற்றாக்குறையால் பொக்லைன் எந்திரம் மூலம் கிணறு வெட்டும் விவசாயிகள்

    • இந்த நவீன எந்திரங்களின் மூலம் 50 அடி ஆழமுள்ள கிணற்றை தோண்ட ரூ.1 லட்சம் மட்டுமே செலவாகிறது.
    • மூன்று அல்லது நான்கு நாட்களில் 40 முதல் 50 அடி வரை கிணற்றை தோண்டி விடுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக மானாவாரி நிலங்களில் அதிக அளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாய பணிகள் மேற்கொள்வது தற்போது கடினமாக மாறி உள்ளது. தண்ணீர் இல்லாததால் நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து அதன் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், காய்ந்து கருகும் பயிர்களை, பாதுகாக்க விவசாயிகள் கிணறு தோண்டி அதன் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் மேற்கொள்ளும் முறைகளுக்கு மாறி வருகின்றனர். கடந்த காலங்களில் ஒரு கிணறு தோண்டுவதற்கு பல மாதங்கள் ஆகும். அதன் பின்னர் கிணற்றில் ஊற்று தண்ணீர் தேங்கி அந்த கிணற்றிலிருந்து நீரேற்றும் முறை மூலம் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படும்.

    ஒரு கிணறு தோண்டு வதற்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதற்கு அதிகளவிலான நாட்களும் பணமும் செலவாகும். அதன்பிறகு ஆயில் என்ஜின் வைத்து, கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டனர். இதில் நாட்கள் மட்டுமே குறைந்தது. தற்போதைய சூழலில் கிணறு தோண்டுவது போன்ற கடினமான பணிகளுக்கு கடும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்ட விவசாயிகள் சிறிய ரக பொக்லைன் மற்றும் கிரேன் என நவீன எந்திரங்களின் உதவியால் விரைவாகவும், குறைந்த செலவில் விவசாய கிணறு ளை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக பழைய கிணறுகளிலும் இந்த சிறிய ரக பொக்லைன் எந்திரங்களை இறக்கிவிட்டு கிணறுகளை ஆழப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்கின்றனர். இதற்கு இரண்டு இயந்திரங்கள், இரண்டு ஆட்கள் இருந்தால் போதுமானது.

    ஆட்கள் பற்றாக்குறையை ஈடு செய்ய இந்த எந்திரங்கள் பெரிதும் உதவி வருவதாகவும், ஆட்கள் மூலம் ஒரு கிணறு வெட்டும் போது ஒரு நாளைக்கு இரண்டு அடி மட்டுமே வெட்ட முடியும்.

    மேலும் 40 முதல் 50 அடி ஆழம் வரை கிணறு வெட்டுவதற்கு சுமார் 1 மாதத்திற்கு மேலாகும். அதேப்போல் பணம் ரூ.5 முதல் 6 லட்சம் வரை செலவாகிறது.

    ஆனால் இந்த நவீன சிறிய ரக பொக்லின் எந்திரத்தில் ஒரு நாளைக்கு 6 அடி முதல் 10 அடி வரை கிணறு வெட்ட முடியும். மூன்று அல்லது நான்கு நாட்களில் 40 முதல் 50 அடி வரை கிணற்றை தோண்டி விடுகிறது.

    இந்த எந்திரங்களுக்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு தலா ரூ.7000 ஆகிறது. இந்த இரண்டு வாகனங்களுக்கும் ரூ.14,000 செலவாகிறது. இந்த நவீன எந்திரங்களின் மூலம் 50 அடி ஆழமுள்ள கிணற்றை தோண்ட ரூ.1 லட்சம் மட்டுமே செலவாகிறது.

    மேல் மட்டத்தில் உள்ள மண்ணை தோண்டுவதில் இருந்து அடிமட்டம் வரை மண் பறிக்கும் நவீன எந்திரம் தனது பணியை செய்ய, மேலே ஒரு எந்திரம் இயக்கப்பட்டு கீழ் இருக்கும் மண் மற்றும் கற்களை மேலே எடுத்து வந்து கொட்டுகிறது.

    இந்த முறையில் கிணறு வெட்டுவதால், பணம், நேரம் குறைவாகிறது. மேலும் கூலியாட்கள் தேவை இல்லை என்பதால், தற்போது தருமபுரி மாவட்ட த்தில் தருமபுரி அரூர், மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிகமாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் மத்தியிலும் இந்த எந்திரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    மேலும் சாலை அமைப்பது, பெரிய பாலங்கள் கட்டுவது, பெரிய தொழிற்சாலைகள் அமைப்பது எனஅனைத் திலும் நவீன எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு பயன் தரும் கிணறுகள் வெட்டுவதிலும் இந்த எந்திரங்களை பயன்பாடு பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

    மேலும் வறட்சி காரணமாக பல்வேறு இடங்களில் கிணறு வெட்டும் பணி கிடைப்பதால், எந்திர உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×