search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் நகை பறித்த  வாலிபர் கைது
    X

    பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

    • மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர்.
    • தனியாக இருந்த பெரியம்மாளிடம் நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எம்.ஜி.ஆர்.நகர் நல்லிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி பெரியம்மாள் (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    பெருமாள் கவுண்டர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் வெளியூரில் தங்கி வேலைப்பார்த்து வருகிறார். இவர் மாதத்தில் ஒரு முறை தனது வீட்டுக்கு வந்து செல்வார்.

    பெரியம்மாள் மட்டும் தனியாக இருந்து கொண்டு தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு பெரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது இரவு 8 மணியளவில் அவரது வீட்டிற்குள் வந்த மர்மநபர் ஒருவர் பெரியம்மாளின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு வீட்டிற்கு வெளியே தயாராக இருந்த மற்றொரு வாலிபருடன் தப்பி சென்றார். பின்னர் பெரியம்மாள் இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் சத்தியமங்கலம் எஸ்.டி. கார்னர் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் நாமக்கல்லை சேர்ந்த ஜனா என்கிற ஜனார்த்தனன் (26) என்றும் இவர் தான் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த பெரியம்மாளிடம் நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இது தொடர்பாக தலைமறைவான மற்றொருவரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×