search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை
    X

    ஈரோடு சடையப்பா ரோட்டில் உள்ள பெரிய பள்ளத்தில் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளதால் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை

    • மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 54 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முழுவதும் வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து ஆங்காங்கே இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக தாளவாடி அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும், வெப்ப சலனம் அதிகமாக காணப்பட்டது. மாலை 5 மணிஅளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. அதைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணிநேரம் ஈரோடு மாநகர் பகுதியில் கனமழை கொட்டியது.

    வீரப்பன்சத்திரம், பஸ்நிலையம், பெரியவலசு, பன்னீர்செல்வம் பூங்கா, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், ரங்கம்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, கொங்கலம்மன் கோவில் வீதி, முனிசிபல் காலனி, பெருந்துறைரோடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதேபோல் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது.

    பலத்த மழை காரணமாக ஈரோடு நாடார்மேடு கெட்டிநகர் பகுதியில் சாஸ்திரிநகர் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் மின் வயர்களும் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மாலை 6 மணிஅ ளவில் இருந்து மின் வினியோகம் துண்டித்தது. நள்ளிரவிலும் மின் வினியோகம் சரி செய்யப்படாததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதேபோல் ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டு பின்பகுதியில் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது.

    இதேபோல் மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 54 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    பவானியில் சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. தாளவடியில் கடந்த 4 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் தாளவாடி மலைப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    மாவட்டத்தின் முக்கிய அணைப்பகுதிகளான வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம், பவானிசாகர், கொடிவேரி அணைப்பகுதி போன்றவற்றில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரை ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது .அப்போது மின்னல் தாக்கியதில் புஞ்சைபுளியம்பட்டி அருகே பொன்னம்பாளையத்தில் உள்ள பழமையான மதிப்பாபுரி அம்மன் கோவில் கோபுரம் சேதம் அடைந்தது.

    மேலும் கோபுரத்தில் உள்ள சில சாமி சிலைகளும் சேதம் அடைந்தது. மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கிய நாள் முதல் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    அம்மாபேட்டை-54, தாளவாடி - 34.2, ஈரோடு - 23, பவானி - 10.8, குண்டேரி பள்ளம் - 8.2, வரட்டுபள்ளம் - 6.8, சென்னிமலை - 6.4, கோபி - 4.2, பெருந்துறை - 4, எலந்தகுட்டைமேடு-3.2, கொடிவேரி அணை - 3, சத்தியமங்கலம் - 2, பவானிசாகர் - 1.8.

    Next Story
    ×