பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து 3,122 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாக சரிந்து உள்ளது.அணைக்கு வினாடிக்கு 3,122 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து 3,122 கனஅடியாக அதிகரிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,122 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1500 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 1800 கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டு வருகிறது. காலிங்கராயன் பாசனத்திற்கும், பவானி ஆற்றுக்கும் தொடர்ந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதே போல் குண்டேரிப் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.50 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 8.69 அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.83 அடியும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com