பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடியாக சரிவு

2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடியாக சரிவு
Published on

ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக வந்தது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீன் அளவும் குறைந்தது. இருந்த போதிலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.14 அடியாக உள்ளது. இன்று இரவு அல்லது நாளை மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இன்று வினாடிக்கு 1,072 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை அணை எட்டி உள்ளது. தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கமாக ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com