கருப்பன் யானை மீண்டும் அட்டகாசம்

சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் ஒற்றை காட்டு யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. எனவே வனத்துறை விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கேரிக்கை வைத்துள்ளனர்.
கருப்பன் யானை மீண்டும் அட்டகாசம்
Published on

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது. இதில் கருப்பன் என்ற ஒற்றை யானை திகனாரை மற்றும் தர்மாபுரம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து 2 விவசாயிகளை கொன்றது.

இந்த ஆட்கொல்லி யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த யானையை விரட்ட பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என இரண்டு கும்கி யானைகள் தாளவாடி அடுத்த இரியபுரம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதை தொடர்ந்து கருப்பன் யானையை வனத்துறையினர் கும்கியானை உதவியுடன் அடர்ந்த வனப்பகுதியில் விரட்டினர்.

இந்நிலையில் ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகனாரை அருகே உள்ள ஜோரகாடு பகுதியை சேர்ந்த மாதேவசாமி (28) என்பவர் தனது 5 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் ஒற்றை காட்டு யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. சத்தம் கேட்டு சென்ற விவசாயி ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதம் செய்வது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி வனத்துறைக்கும் அருகில் இருந்த விவசாயிகளுக்கும் தகவல் அளித்தார். பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் சென்றது. இதில் 1 ஏக்கர் கரும்பு சேதம் ஆனது. கருப்பன் ஆட்கொல்லி யானையை விரட்ட இரண்டு கும்கி யானைகள் இருக்கும் நிலையில் கருப்பன் யானை இரியபுரம் கிராமத்தில் இருந்து தற்போது திகனாரை கிராமத்திக்கு சென்றுள்ளதால் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறை விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கேரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com