search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான வாலிபர் இன்று மாலை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்
    X

    கைதான வாலிபர் இன்று மாலை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்

    • போலீசார் விசாரணையில் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் ஆசிப்முசாப்தீனுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.
    • இதனை அடுத்து அவர் மீது உபா சட்டம் உள்பட 10 பிரிவுகளின் கீழ் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் ஐ.எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கடந்த மாதம் 26-ந் தேதி ஈரோட்டுக்கு வந்தனர்.

    அவர்கள் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆசிப் முசாப்தீன் (27) என்ற வாலிபரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து செல்போன்கள், டைரிகள், சிம்கார்டுகள், லேப்டாப்புகள், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் கைப்பற்றினார்.

    போலீஸ் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் ஆசிப்முசாப்தீனுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.

    இதனை அடுத்து அவர் மீது உபா சட்டம் உள்பட 10 பிரிவுகளின் கீழ் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் கைதான ஆசிப் முசாப்தீன் மீதான வழக்கு ஈரோடு மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு நேற்று முன்தினம் வந்தது.

    இதற்காக கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து முசாப்தீன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

    விசாரணையின் போது முசாப்தீனிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி மாலதி 2 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து ஆசிப் முசாப்தீனை போலீசார் ரகசிய இடத்தில் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் அவருக்கு எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது.

    அவருக்கு யாரெல்லாம் உதவி செய்தனர். தமிழகத்தில் வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? போன்ற கேள்விகளை முசாப்தீ னுவிடம் அடுக்கடுக்காக கேட்டனர். விடிய, விடிய அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் உடன் இருந்தனர். தொடர்ந்து இன்றும் விசாரணை நடந்தது. இன்று மாலையுடன் போலீஸ் காவல் முடிவடைய உள்ளதால் போலீசார் முசாப்தினை இன்று மாலை மீண்டும் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.

    Next Story
    ×