search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைக்காலம் தொடங்கியதால் வீடுகளுக்கு படையெடுக்கும் பாம்புகள்
    X

    மழைக்காலம் தொடங்கியதால் வீடுகளுக்கு படையெடுக்கும் பாம்புகள்

    • செல்போன் வெளிச்சத்தில் கோழி கூண்டுக்குள் பார்த்தபோது அங்கு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர் 2 பாம்புகளையும் பிடித்தார். அது மஞ்சள் சாரை, கருப்பு சாரை என தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு படையெடுக்கும் பாம்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நஞ்சை ஊத்துக்குளி அடுத்த கோவிந்த நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் வீட்டின் பின்புறம் கோழிகளை வளர்த்து வருகிறார்.

    இதற்காக பெரிய அளவில் கூண்டு கட்டப்பட்டிருந்தது. தினமும் இரவில் கூண்டிற்கு சென்று கோவிந்தராஜ் கோழி முட்டைகளை எடுப்பது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு கோவிந்தராஜ் வழக்கம் போல் கோழி கூண்டிற்கு சென்று முட்டையை எடுக்க சென்றார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

    கோழி கூண்டு கதவை திறந்த போது கோழி இறக்கையை அடித்துக்கொண்டு அலறியது. பின்னர் சிறிது நேரத்தில் ரத்தம் வந்து இறந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் செல்போன் வெளிச்சத்தில் கோழி கூண்டுக்குள் பார்த்தபோது அங்கு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோழி கூண்டுக்குள் புகுந்த பாம்பு முட்டையை உடைத்து, கோழியையும் கடித்து கொன்று உள்ளது.

    இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கோவிந்தராஜ் வீட்டுக்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்க முயன்றார்.

    அது 6 அடி நீளம் உள்ள கோதுமை நாகம் என தெரிய வந்தது. பின்னர் பாம்பை அவர் லாபகரமாக பிடித்து அதை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

    இதேப்போல் ஈரோடு கொல்லம்பாளையம் அருகே இரும்பு கடை வியாபாரி ஒருவர் வீட்டில் தேங்காய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதன் இடையே 2 பாம்புகள் இருப்பதை கண்ட அவர் இது குறித்து யுவராஜிக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர் 2 பாம்புகளையும் பிடித்தார். அது மஞ்சள் சாரை, கருப்பு சாரை என தெரிய வந்தது.

    இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் கூறியதாவது: தற்போது ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பாம்புகள் தங்கி இருக்கும் பொந்துகளில் மழை நீர் புகுந்து விடுகிறது.

    இதன் காரணமாக பாம்புகள் அங்கிருந்து வெளியேறி வீடுகளை நோக்கி படை யெடுக்க தொடங்கியுள்ளது.

    மேலும் வாய்க்கால் கரை பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் பாம்புகள் அங்கிருந்து வெளியேறி வீடுகளை நோக்கி வர தொடங்கி யுள்ளது. பொதுமக்கள் மழைக்காலம் என்பதால் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

    வீட்டில் பழைய பொருட்களை ஒரே இடத்தில் அடுக்கி வைக்கக் கூடாது. செருப்பு ஸ்டாண்ட், மீட்டர் பாக்ஸ் போன்ற பகுதிகளை கவனமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக மோட்டார் சைக்கிளை இயக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதற்குள் பாம்பு செல்ல வாய்ப்புள்ளது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட பாம்புகள் வீட்டுக்கு வந்துள்ளன. பெரும்பாலும் கொம்பேறி மூக்கன், தண்ணீர் சாரை, கட்டு விரியன், கண்ணாடி விரியன், கோதுமை நாகப் பாம்புகள் அதிக அளவில் வருகின்றன.

    மழைக்காலம் முடியும் வரை பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×