search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனவிலங்குகள் வேட்டையாட பதுக்கிய  நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
    X

    வனவிலங்குகள் வேட்டையாட பதுக்கிய நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

    • வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர்களை வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிப்புத்தூர், காளியூர் மற்றும் கெம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நேற்று பங்களாப்புதூர் போலீசார் ரோந்து ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது டி.ஜி.புதூர்-கே.என்.பாளையம் சாலையில் உள்ள காளியூர் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் சென்றபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்றிருந்த கே.என்.பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த வேட்டையன் (50) மற்றும் நாராயணன் (58) ஆகிய இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் விரட்டிய போது, அருகில் வந்தால் நாட்டு வெடியை வீசி கொன்று விடுவோம் என்று போலீசாரை பார்த்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பியோட முயன்ற இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில், இருவரும் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை அச்சுறுத்தவும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கும், அவுட்காய்கள் எனப்படும் நாட்டுக்காயை வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நான்கு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, வேட்டையன், நாராயணன் ஆகிய இருவர் மீதும் கொலை மிரட்டல், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் புளியம்பட்டி பகுதியிலும் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. மொத்தம் 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதுபோன்ற சட்ட விரோதமாக வெடிபொருட்கள் வைத்திருப்பவர்கள் சம்பந்தமாக புகார் அளிக்க விரும்புபவர்கள் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னிடம் நேரடியாகவோ, அல்லது தனது வாட்ஸ்அப் எண் 9655220100 என்ற எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் காவல் அலுவலகத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம். இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் கொடுப்பவரின் பெயர் முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×