search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவர் மாயம்
    X

    கவியரசு.

    பிளஸ்-2 மாணவர் மாயம்

    • சிறப்பு வகுப்புக்கு சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி கிராமம் மூலகவுண்டன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பராஜ். இவரது மகன் கவியரசு (17).

    கவியரசு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் 11-ம் வகுப்புக்காக அவரை அந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    இது கவியரசுக்கு பிடிக்கவில்லை. தான் பழைய பள்ளியில் படிப்பதாக கூறினார். அதற்கு அவரது பெற்றோர் பிளஸ்-1 மட்டும் இந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு உன்னை பழைய பள்ளியில் சேர்த்து விடுவதாகவும் கூறினர்.

    இதனால் விருப்பமின்றி கவியரசு அந்த பள்ளியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வீட்டில் யாருக்கும் சொல்லாமல் ரெயில் ஏறி சென்னை சென்று விட்டார். பின்னர் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் கவியரசை அவரது பெற்றோர் மீட்டு வந்தனர்.

    அதன் பின்னர் பிளஸ்-1 பொதுத்தேர்வை கவியரசு எழுதி முடித்தார். அதன் பின்னர் பிளஸ்-2 சிறப்பு வகுப்புக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் சிறப்பு வகுப்புக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர் பள்ளியில் தொடர்பு கொண்டு கேட்ட போது உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை என்று கூறி விட்டனர்.

    இதனையடுத்து அவரது பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×