வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி

அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது.காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.
வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி
Published on

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால் குழந்தைகள் முதியவர்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் மூன்று நாட்கள் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்தது.

ஆனால் அதன் பிறகு அக்னி நட்சத்திர வெயில் தனது கோர தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.

குறிப்பாக 11 மணி முதல் மதியம் 5 மணி வரை வெயிலில் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்துடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இவர்கள் எப்படி என்றால் வீட்டில் உள்ளவர்கள் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கி கொண்டே தான் இருக்கிறது.

எனினும் வெப்பம் காரணமாக புழுக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயில் தாக்கம் காரணமாக உடலில் நீர் சத்து குறைந்து தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் அதிகரித்து வருகிறது. எனவே நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை கூட எடுத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதுபோக மோர், இளநீர், அதிக அளவில் பருகலாம் எனவும் இதனால் நீர் சத்து கிடைக்கும் இடமும் மதித்து உள்ளனர்.

நொங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காயும் உடலுக்கு இதமானது என அறிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஈரோட்டில் சராசரியாக 102 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திரம் விடைபெறுகிறது. அதுவரை சமாளித்து தான் ஆக வேண்டும் என பொதுமக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com