முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்

பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பொங்கல் வைத்து ஆடு, கோழி, பலி கொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
Published on

சென்னிமலை:

சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. நவம்பர் 8-ந் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.

அன்று முதல் இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடந்தது. கடந்த 14-ந் தேதி இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மன்கோவில்புதூர், வாய்கால்மேடு பகுதி மக்கள் வந்து வழிபாடு நடந்தினர்.

நேற்று இரவு புதன்கிழமை காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து இரவு 8.30 மணிக்கு மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேக ஆராதனை நடந்தது.

அதைத்தொடந்து இரவு கொமாரபாளையம், பனங்காட்டுபுதூர் மக்கள் காவடி எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனர். அதன் பின்பு இரவு 12 மணி அளவில் காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊர் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாவிளக்கு பூஜை நடத்தினர்.

தொடர்ந்து இன்று காலை 7.20 மணிக்கு உற்சவ அம்மைக்கு மகா அபிஷே கமும், அதன் பின்பு காலை 8.10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதை தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி, பலி கொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

மாலை 3.30 மணிக்கு குழந்தைகள் சேற்று வேஷம் இட்டு மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்துவர். மாலை 5:20 மணிக்கு தேர் நிலை சேரும். இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடக்கும்.

நாளை மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன் 15 நாள் விழா நிறைவு பெறுகிறது. முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை தொடர்ந்து முருங்கத்தொழுவு சுற்று பகுதியில்உள்ள 14-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com