மகுடேஸ்வரர்- வீரநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம்

விநாயகர், சிவன் மற்றும் பிரம்மா திருத்தேரோட்டம் நடந்தது.பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Published on

கொடுமுடி:

ஈரோடு மாவட்டத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு எனும் மும்மூர்த்திகள் அருள் பாலிக்கும் தலமாக பிரசித்தி பெற்ற கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் திகழ்ந்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் சிறந்த பரிகார தலமாக கொடுமுடி சிறந்து விளங்குகிறது. இதனால் தினமும் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாளை வழிபடுகிறார்கள்.

கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்த நிலையில் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்ட விழா கடந்த 24-ந் தேதி கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது. 25-ந் தேதி சிவன், பெருமாள் கெடியேற்றம் நடந்தது.

இதையொட்டி அன்று முதல் தினமும் சுவாமிகள் திருவீதி உலா நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

மேலும் தினமும் சாமி புறப்பாட்டுடன் ஒதுவா மூர்த்திகள் குழுவினரின் திருமுறை பாராயணம் நடந்தது. இதை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி திருக்கல்யாணம் நடந்தது.

இதையொட்டி இன்று (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக சாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சிவன் மற்றும் பிரம்மா திருத்தேரோட்டம் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய பகுதிகள் வழியாக சென்றது.

விழாவில் கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து இன்று மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி நாளை காலை சிவன், பெருமாள் புறப்பாடும், சூல தேவர், சக்கரத்தாழ்வார் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

இதை தொடர்ந்து நாளை மாலை கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com