search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது
    X

    கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது

    • தொழிலாளி செல்வன் மாதம்மாளையும், செல்வனையும் அரிவாளால் வெட்டினார்.
    • இதில் கணவன்-மனைவி 2 பேரும் காயம் அடைந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 45). கூலி தொழிலாளி. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (60). தொழிலாளி. இவருக்கும், மாதம்மாளுக்கும் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாதம்மாளும், கூகலூரை சேர்ந்த அவருடைய 2-வது கணவர் செல்வன் (36) என்பவரும் பொலவக்காளி பாளையம் வந்தனர்.

    அப்போது மது போதையில் இருந்த தொழிலாளி செல்வனுக்கும், மாதம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளி செல்வன் மாதம்மாளையும், செல்வனையும் அரிவாளால் வெட்டினார்.

    இதில் கணவன்-மனைவி 2 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து செல்வன் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.

    இதை தொடர்ந்து காயம் அடைந்த மாதம்மாள், செல்வன் ஆகிய 2 பேரும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான செல்வனை தேடி வந்தனர். இந்த நிலையில் கணவன்- மனைவியை அரிவாளால் வெட்டிய செல்வனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×