search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 18,200 கன அடியாக அதிகரிப்பு
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 18,200 கன அடியாக அதிகரிப்பு

    • நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது.
    • அணைக்கு நீர் வரத்து காலை 9 மணி முதல் அதிகரிக்க தொடங்கியது. மதியம் 12 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்தது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி முதலில் கீழ் மதகுகள் வழியாகவும், அதன் பிறகு மேல் மதகுகள் வழியாகவும் 25,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. சத்திய–மங்கலத்தில் கரையோரம் இருந்த சுமார் 15 குடும்பத்தினர் பாது–காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கரையோரம் பகுதியில் இருந்த வர சித்தி விநாயகர் கோவில் படிக்கட்டை வெள்ளம் சூழ்ந்தது.

    கோபி அருகே உள்ள அரசூர் மற்றும் மாக்கி–ணாங்கோம்பை கிராமங்கள், அத்தாணி அப்பக்கூடல் பகுதிகளில் உள்ள கரையோர பகுதி–களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் பவானி ஆற்றில் திறந்து விடப்படும் நீரும் குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,300 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இந்த 12,300 கன அடி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து காலை 9 மணி முதல் அதிகரிக்க தொடங்கியது. மதியம் 12 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்தது.

    இதன் காரணமாக கொடிவேரி அணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக இன்று 4 -வது நாளாக கொடிவேரி அணையில் குளிக்க பொது மக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம் அணை 27.41 அடியாகவும், பெரும்பள்ளம் அணை 17.49 அடியாகவும், வரட்டு பள்ளம் அணை 33.50 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×