ஈரோடு புறநகர் பகுதியில் கொட்டி தீர்த்த மழை

இடியுடன் கூடிய கனமழை பெய்தது.நம்பியூரில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு புறநகர் பகுதியில் கொட்டி தீர்த்த மழை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. அனல் காற்றுடன் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாநகர பகுதியில் 45 நிமிடம் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதேபோல் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை வணக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. ஆனால் மதியம் 3 மணி பிறகு ஈரோடு புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

குறிப்பாக நம்பியூரில் மதியம் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதுபோல் கோபிசெட்டிபாளையம் பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் நம்பியூரில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதேபோல் கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, அம்மாபேட்டை, பவானிசாகர், சென்னிமலை, பவானி போன்ற புறநகர் பகுதியில் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. ஆனால் அதேநேரம் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை மழை பெய்யவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

நம்பியூர்-46, கோபி-29, பெருந்துறை-16, எலந்தகுட்டை மேடு-13, அம்மாபேட்டை-6, பவானிசாகர்-3.20, சென்னிமலை-3, பவானி-3.30.

X

Maalai Malar
www.maalaimalar.com