ஈரோடு முதன்மை கல்வி அலுவலகத்தில் குவிந்த பட்டதாரிகள்

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர்.குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு முதன்மை கல்வி அலுவலகத்தில் குவிந்த பட்டதாரிகள்
Published on

ஈரோடு:

தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி நிலவரப்படி காலி யாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இதற்காக அனைத்து மாவட்டத்திலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-20, ஆங்கிலம்-1, கணிதம்-4, அறிவியல்-14, சமூக அறிவியல்-8 என 47 காலி பணியிடங்களும், முதுகலை ஆசிரியர் தமிழ்-12, ஆங்கிலம்-7, கணிதம்-10, வேதியியல்-11, வணிகவியல்-18, பொருளாதாரம்-25, வரலாறு-7, கணினி அறிவியல்-2 என 92 காலி பணியிடங்கள் உள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர். அவர்கள் அவர்களது விண்ணப்ப த்தினை கைப்பட எழுதி, ஈரோடு கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்தனர்.

இதேபோல் பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய கல்வி மாவட்ட அலுவலகத்திலும் விண்ணப்பிக்க அதிகளவிலான பட்டதாரிகள் குவிந்தனர். சிலர் மின்னஞ்சல் வாயிலாகவும் கல்வி மாவட்ட அலுவலருக்கு விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பலாம் என்றும், குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com