search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
    X

    விவசாயிகள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

    • கூரபாளையம் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காத்திருப்பு போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இந்திய அரசு எம்.எஸ்.சாமிநாதன் ஆணையத்தின் படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசின் கொள்முதலை அனைத்துப் பொருட்களுக்கும் உத்தரவாதப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டம் இயற்றி பாதுகாக்க வேண்டும்.

    தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.3000, கரும்பு டன்னுக்கு ரூ. 5000, மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12,000, மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000, மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3000, மாட்டுப்பால் லிட்டர் ரூ.50, எருமை பால் லிட்டர் ரூ. 75 வழங்கிட வேண்டும்.பட்டுப்புழுவிற்கு குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ரூ.700 நிர்ணயம் செய்ய வேண்டும்.

    அரசு தென்னை, பனையில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். தேங்காய், கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து மானிய விலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொப்பரை தேங்காவுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 150 நிர்ணயம் செய்ய வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்திலேயே உழைப்பை செலுத்திட அனுமதி வழங்க வேண்டும்.

    பயிர் காப்பீடு திட்டத்தை காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். பாண்டியாரு- புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பவானி ஆற்றை மாசுபடுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள அன்னூர் பவானிசாகர் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு பெருந்துறை ரோடு அடுத்த கூரபாளையம் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் கடந்த 5-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. இன்றைய காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொருளாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், தெற்கு மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இனாம் விவசாயிகள் இணை ஒருங்கிணைப்பாளர் கருணா மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×