மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம்

பாரம்பரிய நெல் உற்பத்தி செய்யப்பட்டு நடப்பு சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த ரகங்களை சாகுபடி செய்வதால் மண்வளம் பேணிக்காக்கப்படுகிறது.
மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தூயமல்லி என்ற பாரம்பரிய நெல் பவானி அரசு விதைப்பண்ணையில் சென்ற ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு நடப்பு சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமை திட்டம் 2023-24-ம் ஆண்டிற்கான திட்டக்கூறு களில் ஒன்றான நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகம் தூயமல்லி விதைகள் உற்பத்தி செய்யப் பட்டு விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.25 வீதம் ஈரோடு மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பாரம்பரிய நெல் பயன்பாடு நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் மனித வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் கிடைப்பதுடன் இவ்வாறான ரகங்கள் அனைத்து விதமான மண் வளத்திலும், பாதகமான வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை கூட தாங்கி வளரக்கூடிய திறன் படைத்ததாகவும் உள்ளது.

மேலும் இந்த ரகங்களை சாகுபடி செய்வதால் மண்வளம் பேணிக்காக்கப்படுகிறது. கால்நடைகள் பாரம்பரிய நெல் ரகத்தின் வைக்கோலை விரும்பி உட்கொள்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், கோபிசெட்டி பாளையம், மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் டி.என்.பாளையம் தவிர மற்ற வட்டாரங்களில் குறைந்த அளவே மொத்தம் 1314 கிலோ மட்டுமே இருப்பு உள்ளது.

எனவே பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து மானிய விலையில் வாங்கி பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) எஸ்.வெங்கடேசகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com