search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரகு சாகுபடி பரப்பு 300 ஏக்கராக அதிகரிப்பு
    X

    வரகு சாகுபடி பரப்பு 300 ஏக்கராக அதிகரிப்பு

    • ஈரோடு மாவட்டத்தில் சிறு தானிய பயிரில் வரகு சாகுபடி பரப்பு 300 ஏக்கராக அதிகரித்து உள்ளது.
    • பயறு வகை பயிர்களில் ஏக்கருக்கு 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
    • இயற்கை முறை சாகுபடி என்பதால் தரமான விளை பொருளுக்கான அதிகப்பட்ச விலை கிடைக்கும்.

    ஈரோடு:

    அந்தியூர் தாலுகா பர்கூர் மலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு செய்தார்.

    பின்னர் இது குறித்து சின்னசாமி கூறியதாவது:-

    இந்த ஆண்டில் அந்தியூர் உள்ளிட்ட மலைப்பகுதியில் கோடை மழை போதிய அளவு பெய்துள்ளது.

    இதனால் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவாக்க அலுவலர்கள் இப்பகுதி விவசாயிகளிடையே சிறு தானியம் குறித்தான உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    எப்போதும் இல்லாத வகையில் தற்போது வரகு பயிர் 300 ஏக்கரிலும், பயறு வகைகளான உளுந்து, தட்டை பயறு, பாசிப்பயறு 1,800 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தேவர்மலை, மடம், கடையீரட்டி, வெள்ளி மலை, பெஜலிட்டி, ஈரட்டி, எலச்சிபாளையம் போன்ற கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நல்ல நிலையில் உள்ளன.

    விதை கிராம திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் 1,000 கிலோ வம்பன்– 8 என்ற உயர் விளைச்சல் உளுந்து ரகம், 500 கிலோ பாசிப்பயறு வம்பன்– 6 ரகம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    பயறு வகை பயிர்களுக்கென்றே உண்டான சிறப்பம்சமான வேர் முடிச்சுகள் உருவாவது இங்கு சாகுபடி செய்யப்பட்ட பயறு வகை பயிரில் அதிக எண்ணிக்கையில் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதனால் பயிரின் வளர்ச்சி நல்ல நிலையில் இருப்பதும், அதிகமான பூக்கள் எடுப்பதும், அதிக மகசூல் கிடைப்பதும் எளிதாகி உள்ளது.

    பயறு வகை பயிர்களில் ஏக்கருக்கு 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கு முற்றிலும் இயற்கை முறை சாகுபடி என்பதால் தரமான விளை பொருளுக்கான அதிகப்பட்ச விலை கிடைக்கும்.

    இப்பகுதி விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு தாமரைக்கரையில் துணை வேளாண் விரிவாக்க மையம் கட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×