என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த பூனை உயிருடன் மீட்பு
- பூனை ஒன்று எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி பூனையை உயிருடன் மீட்டனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் ரோடு மொண்டிப் புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 40). இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது வீட்டில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. சுமார் 80 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை இவர் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த பூனை ஒன்று எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது.
இதனையடுத்து சின்னச்சாமி உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
நிலைய அலுவலர் நவீந்தரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி பூனையை உயிருடன் மீட்டனர்.
Next Story






