ஈரோடு மாவட்டத்தில் 85 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இதில் 85 ஆயிரத்து 485 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 85 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
Published on

ஈரோடு:

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமும் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்களுக்கு கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் முதலில் 9 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. தற்போது 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திய வர்களுக்கு 6 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முதலில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட, 60 வயதுக்குட்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 895 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி பெற்றுள்ளனர்.

இதில் கடந்த 26-ந் தேதி வரை 85 ஆயிரத்து 485 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது 7 சதவீதமாகும்.

பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி பெற்றவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com