search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2-வது நாளாக பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தீவிரம்
    X

    2-வது நாளாக பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தீவிரம்

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 2-வது நாளாக ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று டோக்கன் வழங்கினர்.
    • ரேஷன் கடையிலும் தினமும் 200 பேருக்கு மட்டும் பொருட்கள் மற்றும் தொகை வினியோகிக்கப்படும்.

    ஈரோடு:

    தமிழக அரசு பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகள் மூலம் ரூ.1,000 ரொக்கப்பணம், 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. வரும் 9-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் இந்த பணியை தொடங்கி வைக்கிறார்.

    இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலமும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு பெற கூட்ட நெரிசலை தவிர்க்க, ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேற்று முதல் டோக்கன் வழங்கும் பணியில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    வீடு, வீடாக சென்று அக்கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி அதில் பரிசு தொகுப்பு பெற வர வேண்டிய தேதி, நேரம் ஆகியவற்றை தெரிவிக்கின்றனர்.

    இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கினர்.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி இலாகி ஜான் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 7 லட்சத்து 65,845 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதில் அரிசி கார்டு தாரர்கள் 7 லட்சத்து 47,474 பேர் உள்ளனர்.

    அவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கம் வகையில் நேற்று முதல் வீடுவீடாக ரேஷன் கடை ஊழியர்கள் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர்.

    முதல்-அமைச்சர் வினியோகத்தை தொடங்கி வைத்த பின் இங்குள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கும் டோக்கன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

    கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 200 பேருக்கு மட்டும் பொருட்கள் மற்றும் தொகை வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×