201 மையங்களில் குரூப்-4 தேர்வு எழுதினர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களில் நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
201 மையங்களில் குரூப்-4 தேர்வு எழுதினர்
Published on

ஈரோடு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று நடந்த குரூப்-4 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 201 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாவட்டத்தில் குரூப் - 4 தேர்வை 63 ஆயிரத்து 16 தேர்வர்கள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு அலுவலர்கள் 201 பேர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை கண்காணித்தனர்.

மேலும் 43 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் 16 பறக்கும் படைகளும் குழுக்களாக வந்து சோதனை செய்தன. தேர்வை வீடியோவாக படம் பிடிக்க 208 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் சென்று தேர்வை ஒளிப்பதிவு செய்து கொண்டனர்.

தேர்வர்கள் காலை சரியாக 8.30 மணிக்குள் அந்தந்த தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 9 மணிக்கு பிறகு வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வு சரியாக காலை 9:30 மணிக்கு தொடங்கி 12:30 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பின் 12.30 மணி முதல் 12.45 மணி வரை தேர்வர்கள் தங்களது ஓஎம்ஆர் சீட்டை சரியாக பூர்த்தி செய்து உள்ளார்களா என்று பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 12.45 மணிக்கு பிறகு தேர்வர்கள் அறைய விட்டு வெளியே சென்றனர்.

கொரோனா காலகட்டம் என்பதால் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது.அதன்படி தேர்வர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி 90 சதவீதம் பேர் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். ஒரு சிலர் அருகே உள்ள கடைகளில் அவசரமாக சென்று முக கவசம் வாங்கி சென்றதை காண முடிந்தது. தேர்வில் கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் ஆதார், டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட், போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி தேர்வர்கள் அடையாள அட்டை கொண்டு வந்திருந்தனர். அதனை தேர்வு கண்காணிப்பாளர்கள் சோதனை செய்தனர்.

தேர்வு மையங்களில் நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காய்ச்சல் அறிகுறி இருந்த சிலருக்கு தனி அறை ஒதுக்கி அவர்கள் அதில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். செல்போன், டிஜிட்டல் வாட்ச் கொண்டு வர அனுமதி இல்லை. ஒவ்வொரு தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி இருந்தது.

மின்சார வசதி, குடிநீர் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குரூப்- 4 தேர்வை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். குரூப்-4 தேர்வை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு இருந்தன. இன்று நடந்த தேர்வில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று எழுதினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com