search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை நெருங்குகிறது
    X

    என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை நெருங்குகிறது

    • விண்ணப்பிக்க வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
    • சி.பி.எஸ்.இ. மாணவர்களும் விண்ணப்பிக்க தொடங்கினர்

    சென்னை :

    தமிழகம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி தொடங்கியது. விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட நாளில் விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாளாக கடந்த 19-ந் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

    சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகாததை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதி மாற்றப்பட்டு, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாட்கள் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

    அதன்படி, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தேர்வு முடிவு வெளியான அன்றைய தினத்தில் இருந்தே என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு எண்ணிக்கை உயரத்தொடங்கி இருக்கிறது.

    அதற்கு முந்தைய நாட்கள் வரை தினமும் 1,000 பேர் பதிவு செய்து வந்த நிலையில், தேர்வு முடிவு வெளியான நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 300-க்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரும் விண்ணப்ப பதிவு செய்திருக்கின்றனர்.

    அந்த வகையில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, 1 லட்சத்து 99 ஆயிரத்து 213 பேர் விண்ணப்ப பதிவை மேற்கொண்டு இருக்கின்றனர். அவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 858 பேர் கட்டணங்களை செலுத்தி உள்ளதாகவும், அதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 281 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 463 பேர் விண்ணப்ப பதிவு செய்திருக்கின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் 4 லட்சத்தை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) ஆகும்.

    Next Story
    ×