பெரியகுளத்தில் விடிய விடிய மழை :கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் தடை-அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானல், பெரியகுளம் பகுதியில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை படத்தில் காணலாம்.
கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை படத்தில் காணலாம்.
Published on

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழை குறைந்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு கொடைக்கானல், பெரியகுளம் பகுதியில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனச்சரகர் அலுவலர் டேவிட்ராஜா தெரிவித்துள்ளார். நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும். அருவியில் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு குளிக்க சென்றனர். தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதேபோல் ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம், தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழைபெய்தது. இதனால் வெப்பத்தில் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குளிர்ச்சியான சூழல் நிலவியதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியை எட்டியது. அணைக்கு 866 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. 52.36 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 490 கன அடி நீர் வருகிறது.

மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது. விரைவில் 55 அடியை எட்டும் பட்சத்தில் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு 93 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.43 அடியாக உள்ளது. 47 கன அடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

கூடலூர் 10.2, உத்தமபாளையம் 1.3, சண்முகாநதி அணை 47, போடி 14.2, வீரபாண்டி 7.2, மஞ்சளாறு 42, ேசாத்துப்பாறை 55, பெரியகுளம் 85, வீரபாண்டி 5.4, ஆண்டிபட்டி 12.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com