search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாவட்டத்தில் 40,889 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
    X

    கோவை மாவட்டத்தில் 40,889 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

    • தனி நபர் குடிநீர் அளவு 100 லிட்டராக உயர்ந்தது
    • பெரும்பாலான வீடுகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில் குடி நீர் வழங்கப்படவில்லை.

    கோவை

    கோவை மாவட்டத்தில் 228 ஊராட்திகளில், 1190 குக்கிராமங்கள் இருக்கிறது. இதில் 3,74,013 வீடுகள் உள்ளது. பெரும்பாலான வீடுகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில் குடி நீர் வழங்கப்படவில்லை. சிலர் போர்வெல் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலமாக குடிநீர் ஆதாரங்கள் பெற்று பயன்படுத்துகின்றனர்.

    சிலர், குட்டை, ஓடைகளில் வரும் நீரை பயன்படுத்துவதாக தெரிகிறது. சிலர் கிணற்று நீரை குடிநீரா பயன்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் நீர் ஆதாரம் இல்லாமல் பொதுமக்கள் நீண்டதூரம் குடிநீருக்காக சென்று வர வேண்டியிருக்கிறது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியது. கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த திட்டத்தில் 1,87,515 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டில் 41,869 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டது. இந்த ஆண்டில் 40,889 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தர வேண்டி உள்ளது.

    15-வது நிதி திட்டத்தின் கீழ் வீட்டு குடிநீர் இணைப்பாக 21,332 வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய வேண்டியிருக்கிறது. விரைவில் 19,557 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வான நிலையில் இருக்கிறது. இந்த நீரை போர்வெல் மூலமாக எடுத்து மேல் நிலை தொட்டி அல்லது நிலமட்டத் தொட்டிகளில் சேகரித்து அதை குடியிருப்புகளுக்கு வழங்க வாய்ப்புள்ளது. சில இடங்களில் பிரதான குடிநீர் இணைப்புகளில் இருந்து பகிர்மான குழாய்கள் மூலமாக குடி நீரை பகிர்ந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சில கிராமங்களில் வீடுகள் தொலைவில் ஆங்காங்கே அமைந்து–ள்ளது. சில வீடுகள் தோட்டம் மற்றும் ஒதுக்குப்புற பகுதிகளில் இருக்கிறது. மேடு, பள்ளம் மற்றும் வழிப்பாதை இல்லாமல் கூட சில கிராமங்கள் இருக்கிறது. இங்கே ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு வழங்குவதில் சிக்கல் இருக்கிறது.

    இந்த பகுதியில் உள்ளூர் நீராதாரங்கள் மூலமாக குடிநீர் எடுத்து குழாய் மூலமாக குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதான நீர் மூலமாக குடிநீர் பகிர்மான குழாய் மூலமாக வெகு தூரம் கொண்டு செல்லவும் ஏற்பாடு நடக்கிறது. ஓரிரு ஆண்டுகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் முழு அளவில் குடிநீர் வழங்க முடியும்.

    இதற்கான குழாய் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. முழு அளவில் குடிநீர் இணைப்பு வழங்கினால் குக்கிராமங்களில் பொதுமக்கள் வசிப்பது அதிகமாகும். அடிப்படை வசதிகளுக்காக நகர்ப்ப–குதிக்கு பொதுமக்கள் இடம் பெயர்ந்து செல்வது வெகுவாக குறையும்.

    குடிநீர் முழு அளவில் வழங்குவதன் மூலமாக கிராமங்களில் வளர்ச்சி பணிகள் அதிகமாகி வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் தனி நபர் குடிநீர் அளவு தினமும் 100 லிட்டர் என உயர்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

    Next Story
    ×